Monday, December 8, 2014

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி

சொல்லின் செல்வன். இது ஆஞ்சநேயருக்குக் கிடைத்த உயரிய விருது.

தன் பலம் எல்லாம் இன்னதென்று தெரிந்திருந்தும் தன்னடக்கத்துடன் இருந்த மாவீரன் - வாயு மைந்தன்!..


வைகுந்தத்தில்  - 

இராவணனனுக்கு ஒரு முடிவு கட்டுவதென்று முடிவானதும் - 

அந்த கைங்கர்யத்தில் யாரெல்லாம் எந்த மாதிரியெல்லாம் பங்கெடுத்துக் கொள்வது என்று மிகப் பெரிய மந்த்ராலோசனை நடை பெற்றிருக்கின்றது. 

கதை போகும் போக்கு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாததாலும் புரியாததாலும் ஸ்ரீமந்நாராணயனே - 

அவரவருக்குமான பாத்திரப் படைப்பினை வகுத்தருளினார்.

மிக மிக முக்யமானதும் ஆபத்தானதுமான - அந்த பாத்திரத்தைத் தாங்கக் கூடியவர் யாரென்று யோசித்து யோசித்துக் களைத்த வேளையில் -

எல்லாம் வல்ல சிவம் - ருத்ராம்சம் கொண்டு வெளிப்பட்டு நிற்க,

அதன் பின்  - எல்லாத் திட்டமிடலும், 

மங்களம் சுப மங்களம் என்று பூரணமாகியிருக்கின்றது.

இந்த அற்புதத்தினை அருணகிரிப் பெருமான் - திருப்பரங்குன்ற திருப்புகழில் பாடி மகிழ்கின்றார். 


இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசன் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கினக் கர்த்தனென்றும் - நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற் சிறந்த 
அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் 
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து  - புனமேவ

அரியதன் படைக் கர்த்தர் என்று
அசுரர் தங்கிளைக்கட்டை வென்ற 
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்  - மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து 
உலகமும் படைத்துப் பரிந்து 
அருள்பரங் கிரிக்குட் சிறந்த  - பெருமாளே!.. 

வெற்றி கொள்ளும் வானர அரசர்கள் எனும் - 
சுக்ரீவனாக - சூரியன் ,  வாலியாக  - இந்திரன் 
ஜாம்பவான் ஆக - திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமன்
நுட்மான திறன் கொண்ட நீலன் ஆக  - அக்னி ,

- என்று திட்டமிடப்பட்டபோது,

அஷ்டமா சித்திகளையும் தன்னகத்தே கொண்ட அனுமன் - என,

எல்லா வகையிலும் சிறந்த ருத்ரன் விளங்க - இப்படியாக, தேவர்கள் அனைவரும்  அரியதோர் படைக்கு நாயகர்களாக - பூமிக்கு வந்து தன்னுடன் இணைந்திட -

அந்தப் படையைக் கொண்டு - அசுரர் தம் சுற்றம் எனும் பெருங்கூட்டத்தைப் பூண்டோடு அழித்தவனாகிய  - ஸ்ரீராமன் எனும் ஹரிமுகுந்தன் மகிழ்ந்து, 

நற்பண்பில் விளங்கும் என் இனிய மருகனே!.. எனப் புகழும்  திருப்பரங் குன்றத்தின் முருகனே!..- என்று அருணகிரி நாதர் புகழ்கின்றார்.

இத்தகைய சிறப்புக்குரிய ஆஞ்சநேயர்,  

வானர வீரன்  கேசரி - அஞ்சனா தம்பதியினரின் அன்பு மகனாக  - மார்கழி மாதத்தில் -  மூல நட்சத்திரத்தன்று  தோன்றினார்.

சிவபூஜையில் சிறந்து விளங்கிய அந்த இளந்தம்பதியரை வாழ்த்தி  - ருத்ர அம்சத்தை மாங்கனியாக வழங்கியவன் - வாயு!.. எனவே - வாயு புத்ரன்!..


பிறந்ததுமே வானில் தெரிந்த இளஞ்சூர்யனைப் பழம் எனக் கருதி விண்ணில் தாவினார். 

ராகு கேது முதலான அசுரர்களின் தொல்லைகளினால் அஞ்சிக் கிடந்த இந்திரன் - பால ஆஞ்சநேயரின் அசாத்தியத்தைக் கண்டு அஞ்சினான். 

எப்போதும் எதையும் முன்னதாக யோசித்தறியாத இந்திரன் வழக்கம் போலவே - தவறாக முடிவெடுத்து - சூரியனைக் காப்பதற்காக நினைத்துக் கொண்டு குழந்தையின் மீது வஜ்ராயுதத்தை பிரயோகிக்க - 

அது பால ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கியது. பெருந்தாக்குதலினால் - நிலைகுலைந்த ஆஞ்சநேயரின் அபயக்குரல் கேட்டு ஆர்த்தெழுந்த வாயு - இந்திரனின் அடாத செயலைக் கண்டு மனம் பொறுக்காதவனாக - 

பால ஆஞ்சநேயரைத் தன் தோளில் சுமந்து கொண்டு ஒரு குகைக்குள் சென்று  மறைந்து  - தன்னைத் தானே  முடக்கிக் கொண்டான்.  தன் இயக்கத்தைத் தானே நிறுத்திக் கொண்டான்.  இதனால் - சர்வலோகமும் ஸ்தம்பித்தது.

அதன் பின்,  தேவர்களும் மூவர்களும் ஒன்று கூடி - அஞ்சனையின் மகனுக்கு  - வர ப்ரசாதங்களை வழங்கி - சிறப்பித்தனர்.


ஆஞ்சநேயருக்கு சூரியனே - ஓம் என வித்யாரம்பம் செய்து வைத்தான். 

அதன் பின்,  ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷியின் குருகுலத்தில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

அனைத்தையும் கற்று உணர்ந்திருந்தாலும்  - வேடிக்கைக் குறும்புகள் அவரை விட்டுப் போகவில்லை. இதனால் அவரது வலிமை குறைந்து விடக்கூடாது எனக் கருதிய மகரிஷிகள் - 

அனுமனின் பலம் தற்காலிகமாக அவருக்கு மறந்து போகட்டும். ஸ்ரீராம கைங்கர்யத்தின் போது ஜாம்பவான் நினைவு படுத்தும் போது மீண்டும் பொலிந்து விளங்கட்டும்!..   - என கட்டுப்படுத்தி வைத்தனர்.

காலச் சக்கரம் வேகமாகச் சுழல - வானரவேந்தன் சுக்ரீவனின் அமைச்சராக அமர்ந்தார்.

வாலியின் கோபத்திலிருந்து சுக்ரீவனைப் பாதுகாத்து, ரிஷ்ய சிருங்க மலையில் - தங்க வைத்தார்.

அண்ணலும் இளைய பெருமாளும் - ஜானகியைத் தேடி வந்த போது  - அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு - ராமபிரானுடன் சுக்ரீவன் நட்பு கொள்ள காரணமானார்.

இராம பாணத்தால் - வாலி வீழ்ந்த பிறகு -  பேச்சுப்படி படை திரட்டாமல் மயங்கிக் கிடந்தான் சுக்ரீவன். அந்நிலையில் வெகுண்டு வந்த இளைய பெருமாளின் கணைகளிடமிருந்து - மீண்டும் சுக்ரீவனின் உயிரைக் காப்பாற்றி அருளினார்.

சீதா தேவியைத் தேடிக் களைத்த வேளையில் - தோற்று விட்டோம் என அஞ்சிய வானர வீரர்கள் தற்கொலைக்கு முயன்றபோது - அவர்களைக் காத்தருளியவர்  - ஆஞ்சநேயர்.


பின்னும் இலங்கையில் - இராவணனின் கொடுமையால்  - தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சீதையையும் காத்தருளினார். 

யுத்தத்தின் போது  - இந்திரஜித் ஏவிய பாணங்களினால் மயங்கி விழுந்த லக்ஷ்மணனைக் காத்தருள வேண்டி - சஞ்சீவி மூலிகைக்காக  - மலையையே பெயர்த்தெடுத்து வந்தவர் ஆஞ்சநேயர்.


பின்னும்  - அண்ணன் சொன்ன நாள் கடந்து விட்டதெனக் கருதி  பெருந் தீக் குழியினுள் புகத் துணிந்த பரதன் உயிரையும் காத்து நின்றவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயரைக் குறித்த தகவல்களுக்கு அளவேயில்லை.

இத்தனை அசாத்தியங்களும் அவருக்கு எப்படிக் கிடைத்தது?.. 

அதிகார மூர்த்தியாகிய நந்தி தேவர் - இராவணனுக்கு அளித்த சாபத்தினால்!..

இராவணன் - தனது சகோதரன் - குபேரனிடமிருந்த புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு - அதில் கர்வத்துடன் பயணித்தபோது , திருக்கயிலாய மாமலையைக் கடக்க வேண்டியிருந்தது. 

அந்த விமானத்தை இயக்கிய சாரதி சொன்னான். கயிலாயத்தை வலம் வர வேண்டும் - என்று!..

நானாவது!.. வலம் வருவதாவது?.. இங்கே இருப்பது தானே இடைஞ்சல்!.. எடுத்து விட்டால்!..

எடுக்க முயற்சித்தான். அதைக் கண்ட நந்தி தேவர் கூறினார்.

அடாத செயலைச் செய்யாதே!.. ஐயன் உறையும் மலை!.. அடங்கிச் செல்!..

நான் இராவணன்!.. இலங்காதிபதி!.. எட்டுத் திக்கும் என் காலடியில்!.. பத்துத் தலைகளுடன் பாராளுபவன்!.. கனங்கொண்டவன்!.. அரக்க மனங் கொண்டவன்!.. அப்படிப்பட்ட எனக்கா புத்தி சொல்கின்றாய்?.. அதுவும் குரங்கைப் போல முகம்  கொண்ட - நீயா சொல்வது!..

வெகுண்டெழுந்த நந்திதேவர் சாபமிட்டார்.

மூடனே.. முன்னைப் பழவினை மூண்டு வந்து உன்  - மூளையைச் சிதைக்கின்றது. கனம் கொண்டவன் எனக் கொடுவிடம் கொண்டிருப்பவனே - உன்னைக் களங்கண்டு வெல்ல வருவான் ஒருவன். வெற்றுத் தலைகொண்ட வீணனே!.. உன் பத்துத் தலைகளையும் கத்தரித்து எறிய கையில் கோதண்டம் ஏந்தி வருவான் ஒருவன்!.. குறுமதி கொண்ட நீயும் உன் நாடும் ஒரு குரங்கினாலே அழியக் கடவாய்!.. 

இந்த சாபமே - ஸ்ரீ ஆஞ்சநேயரின் திரு அவதாரத்திற்கு அடிப்படை. 


ஆஞ்சநேயர் தம்மை நாடித் தொழும் பக்தர்களுக்கு - புத்திக் கூர்மை, புகழ், நெஞ்சுறுதி, அஞ்சாநெஞ்சம், ஆரோக்யம், உற்சாகம், வாக்கு வன்மை - ஆகியனவற்றை நல்குவதாக -  த்யான ஸ்லோகம் மொழிகின்றது.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா  
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத்:

குருக்ஷேத்திரத்தில், பரந்தாமன் - பார்த்தசாரதியாக  - அர்ச்சுனனுக்குக் கீதை உரைத்தபோது, அதனைத் தேரின் கொடியில் இருந்தபடி -  தாமும் கேட்டவர் ஸ்ரீஆஞ்சநேயர்.


எங்கெல்லாம் - ஸ்ரீராம நாம பாராயணம் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் அருவியாக வழிய - கேட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீஆஞ்சநேயர்.

நாளை - 01.01.2014 - ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி!..

தூய உள்ளத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியைப் 
பணிந்து அனைத்து நலன்களையும் பெறுவோமாக!..

கார்ய ஸித்தி மந்த்ரம் 
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் தவ கிம்வத 
ராமதூத க்ருபாசிந்தோ மத கார்யம் ஸாதய ப்ரபோ: 

நமஸ்கார மந்த்ரம் 
ராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ 
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்து தே;

காயத்ரி மந்த்ரம் 
ஓம் தத் புருஷாய வித்மஹே 
வாயு புத்ராய தீமஹி 
தந்நோ: மாருதி ப்ரசோதயாத்: 


அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன் செல்வன் 
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராம தூதன் 
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக்கென்றும் 
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜயராம்

No comments:

Post a Comment