Saturday, November 22, 2014

சங்காபிஷேகம் தரிசித்தல் சிறப்பைத்தரும்






கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார்.

கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு சிவாலயத்தில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகா விஷ்ணுவைவிட்டு, லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும். ஆலயத்தில் சுவாமிக்குமுன் பூஜை நேரத்தில் ÷ஷாடச தீபாராதனை செய்வார்கள். இதனை வெறும் சடங்காக நினைக்கக்கூடாது. உலகின் தோற்றத்தையும், ஒடுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபட வேண்டும். அதனால் சுகபோகமும் ஞானமும் கிட்டும்.

கார்த்திகைப் பொரி மிகவும் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கும். பொரியுடன் தேங்காயின் சரவலையை சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக வெல்லம் சேர்க்கிறோம். வெண்பொடி பூசிய, என்றென்றும் களங்கமற்ற தூயவனாகிய சிவபெருமானை நெல் பொரி குறிப்பிடுகிறது. வள்ளல் தன்மை படைத்த மாவலியை தேங்காயின் துருவல் உணர்த்துகிறது. கள்ளங்கபடமில்லாத தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.

எல்லா திருமணத்திலும் அருந்ததியை பார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால் தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம். நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவனின் அன்புக்கு உரியவர்களாகி அவனது பொற்பாதத்தில் சரணடைவோம்.

No comments:

Post a Comment