Saturday, November 22, 2014


கோயில்களில் கொடி மரம் அமைப்பது ஏன்?



தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும் கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும், கோயில்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவப்படுகிறது.

கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடி மரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கடுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிக மிகக் குறைந்த நன்மை அளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதான அமைப்பு மிகவும் சிறப்பாகும். கொடிக் கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர்.

இதன் அடியிலிருந்து உச்சி வரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண் கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சம்ஹாரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமைக்கப்பெற்றது.

ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடி மரம் சிவ பெருமான், கொடிக்கயிறு திருவருட்சக்தி கொடித் துணி ஆன்மா, தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும். ஆன்மசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். அறுமாறு மனத்தை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும்.

திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர் பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் எழுந்தருளி அருள் பாலிக்கப்போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைத்து கொடி மரத்தை சூக்ஷம லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும்.

சிவன் கோயிலில் கருடனையும் அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல் பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடி மரத்தில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடி மரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு இவற்றாலான தகடுகள் பொருத்தப்பட்டு இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.

No comments:

Post a Comment