Friday, September 26, 2014

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPBONwyuZU9qCPeXainQOXkbJAVPUFdp2wrW-a5wQKpox5KabuBp-_oBAXXaw428WzCXOX13duyiPDu2CoI3YDPXYH6qd7i0WmIpebJkc0DpTuFj7wLbUStOSEa__lnwvnuoYF5TVkuFY/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg 



தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான் 
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.


ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர் 

No comments:

Post a Comment