Thursday, September 25, 2014

நந்தி தரிசனம்



 சிவலிங்கம் முன் வலதுகாலைச் சற்றே தூக்கியபடி நந்தி அமைந்திருப்பது, காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் தவக்கோலம் ஆகும்.
வலதுபுறம் திரும்பியிருக்கும் நந்தி காதில் குடும்பப் பிரச்னைகள், துன்பங்களை கூறினால் சிவனருளால் நிவர்த்தி கிட்டும் ஐதீகம்.
இடதுபுறம் திரும்பியிருக்கும் நந்தீஸ்வரரிடம் திருமணத் தடை, குடும்பக் கருத்து வேறுபாடுகளைக் கூற பரிகாரம் கிட்டும் என்பது மற்றொரு ஐதீகமாகும்.
சிவனை நோக்கியிருக்கும் நந்தியை வணங்கினால் விரோதம், பகைமையிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறுவார்கள்.
ஆந்திர மாநிலம்- சித்தூர் தாலுகா, சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான் ஆலகாலம்  உண்டதால் மயங்கிய  நிலையில் இறைவியின் மடியில் படுத்தபடி காட்சி தருகிறார். இங்கு நந்தி, சிவபெருமானின் தலைப்பக்கமாக கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளார்.
காஞ்சிபுரத்திற்கு 30 கி.மீ. தொலைவிலுள்ள திருவோத்தூர் கோயில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள வல்லம், திருச்சி-புள்ளம்பாடி சுந்தரேஸ்வரர்  கோயில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம்-பெண்ணாடகம் பிரகதீஸ்வரர் ஆலயம், திருவைகாவூர், சென்னை-திருமுல்லைவாயில் ஆகிய கோயில்களி லும் நந்தி வாசலை நோக்கியபடிதான் உள்ளார்.
மேட்டூர், ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரத்தில் கலசத்திற்கு பதிலாக நந்தி உள்ளது. நாகர்கோவிலிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ‘திற்பரப்பு’ என்ற ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தில் நந்தி, உருண்டைக்கல் வடிவில் காட்சியளிக்கிறார். கர்நாடகா மாநிலம், நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள நந்தி இறைவனைப் பார்க்காமல் வடக்கு பார்த்தபடி காட்சி தருகிறார்.
வேந்தன்பட்டியில் நந்தி தேவருக்கு சாத்தப்படும் பசுநெய் எத்தனை நாளானாலும் கெட்டுப் போவதில்லை. மேலும் இந்த நெய்யில் ஈ, எறும்புகள் மொய்ப்பதுமில்லை.
‘நந்தி’ என்ற சொல்லுக்கு ‘ஆனந்தமாக இருப்பவன்’ என்று பொருள். சிவபெருமானை வழிபடுவதற்கு முன் நந்தியை வழிபட வேண்டும். இவர் அருகில் நெய்விளக்கு ஏற்றி வழிபட நினைத்த காரியம் நிறைவேறும். எதிரிகள் அழிவர். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும் -  சமய நம்பிக்கைகளாகும்.

No comments:

Post a Comment